31/07/2016

தமிழ் இணையக் கல்விக்கழகமும் தகவலாற்றுப்படையும்
முன்னுரை
தமிழ் வளர்ச்சியில், தமிழ் இணையக் கல்வி கழகத்திற்கு என்றுமே தனியிடம் உண்டு. 1999ல் நடைபெற்ற மூன்றாவது தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பெற்ற இப்பல்கலைக்கழகம் பின்னாளில் தமிழ் இணையக் கல்விக் கழகமாக மாற்றம் பெற்று தனிப்பெரும் சிறப்புடன் இன்றளவும் இயங்கிவருகிறது.
தமி்ழ் இணையக் கல்விக்கழகம்
தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. “உலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியைக் கற்கவும் தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையவழி அளிப்பதே தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்.”1 என்ற உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு இணையம் வழி, “முப்பெரும் பணிகளைத் திட்டப்பணிகளாகக் கொண்டு செயல்படுகின்றது. 1. கல்விப் பணி, 2. மின் நூலகப் பணி, 3. தமிழ் மென்பொருள் வளர்ச்சிப் பணி”2 போன்ற பணிகளைச் செவ்வனே செய்து வருகின்றது. இதில்,
மழலையர் கல்வியிலிருந்து பனிரெண்டாம் வகுப்புவரையிலான படிப்புகள் இணையத்தின் வழியே நடத்தப்படுகின்றன. தமிழில் உள்ள அனைத்து நூல்களும் இணையத்தில் ஏற்றும் பணியையும் செய்கிறது. இணையத்தில் தமிழ் எழுத்துக்களையும் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு செல்வதற்கு வேண்டிய மென்பொருள்களைத் தயாரிக்கும் பணியையும் செய்து வருகின்றது.
மின் நூலகப் பணி
இணையத்தில் தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும்  கோப்புகளாகவும் ஒருங்குறி முறையிலும் பதிவேற்றி உலகின் எங்கு இருந்தாலும் உடனடியாகப் பார்வையிடும்படி அமைந்த மின் நூலகத்தை உருவாக்கிய பெருமை இணையக் கல்விக் கழகத்திற்கு உண்டு. நூல்கள், அகராதிகள், நிகண்டுகள், கலைச்சொற்கள். சுவடிகள், பண்பாடு என அனைத்தையும் ஆவணங்களாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதன் திட்டங்களில் ஒரு பிரிவாக தகவலாற்றுப்படை உள்ளது.
தகவலாற்றுப்படை
இணையத்தின் வழியே பல இலக்கியத் தகவல்களை பாதுகாத்து வரும் இணைய பல்கலைக்கழகம் தகவலாற்றுப்படை என்னும் பெயரில் கடந்த ஜீலை 2014 முதல் தொடர் சொற்பொழிவு நடத்தி வருகின்றது. தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றைத் திரட்டி இணையத்தில் ஏற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக தகவலாற்றுப் படையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தகவலாற்றுப்படை சொற்பொழிவுகள்
.  செப்டம்பர் 2015 வரை பதினோரு தொடர் சொற்பொழிவுகளை நடத்தியுள்ள தகவலாற்றுப்படை அமைப்பு. 10/2015ல் பனிரெண்டாவது சொற்பொழிவினை நடத்தவுள்ளது. இதில்,
முதல் சொற்பொழிவு, ஜீலை 2014 ல் ”கல்லில் ஓர் கவிதை – காஞ்சி கைலாசநாதர் கோயில்” என்னும் தலைப்பில் தமிழ் பாரம்பரியம் கலை, பண்பாட்டுத் துறையிலிருந்து ர.கோபு அவர்கள் தொடர் சொற்பொழிவாற்றினார்.
இரண்டாவது சொற்பொழிவு, 12.12.2014 அன்று “சோழர் குறுஞ்சிற்பங்கள்” என்னும் தலைப்பில் மென்பொறியாளர் அரவிந்த் வெங்கட்ராமன் தொடர் சொற்பொழிவாற்றினார்.
மூன்றாவது சொற்பொழிவு, 03.01.2015 ல் “களம் போகும் பழம்பெரும் சிலைகளின் மீட்பு” என்ற தலைப்பில் சிலைமீட்புப் பணிக்குழு சிங்கப்பூரிலிருந்து எஸ்.விஜயகுமார் உரையாற்றினார்.
நான்காவது சொற்பொழிவானது, ஓளவை நடராஜன் அவர்களால் “தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல்” என்னும் தலைப்பில் 13.02.2015 அன்று உரையாற்றினார். இதில் தொல்காப்பியத்தின் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல் ஆகியன விளக்கப்பட்டது.
ஐந்தாவது சொற்பொழிவு, 13.03.2015 அன்று ஒரிசா பாலு அவர்களால் ”தமிழரின் கடலோடிய தொன்மையும் திறனும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
ஆறாவது உரையானது, “மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்” என்ற தலைப்பில் முனைவர் சா. பாலுசாமி சென்னை கிறித்தவக் கல்லூரி பேராசிரியர் 10.04.2015 அன்று தொடர் உரை நிகழ்த்தினார்.
ஏழாவது தொடர் சொற்பொழிவானது, 08.05.2015 அன்று தமிழ் எழுத்தாளர் கா.ரா.அ. நரசய்யா அவர்களால் ” மதராசபட்டினம் ஒரு மாநகரத்தின் கதை” என்னும் தலைப்பில் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நடத்தப்பட்டது.
எட்டாவது சொற்பொழிவு, “கல்லும் சொல்லும்” என்னும் பெயரில் தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர், டாக்டர் இரா.நாகசாமி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
ஒன்பதாவது உரையானது, பத்ரி சேஷாத்ரி அவர்களால், ”ஒற்றைக்கல் கோயில் – ஒரு பார்வை” என்னும் பெயரில் மாமல்லை, வெட்டுவான்கோயில், எல்லோரா ஆகிய கோயில்களைப் பற்றி 10.07.2015 அன்று உரை நிகழ்த்தப்பட்டது.
”ஒலியாகிய மொழி” என்ற தலைப்பில் எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்கள் கடந்த 14.08.2015 அன்று மாலை தொடர் சொற்பொழிவாற்றினார். இது தகவலாற்றப்படையின் பத்தாவது நிகழ்வாகும்.
பதினோறாவது நிகழ்வாக, சென்ற 11.09.2015 அன்று “தமிழக வரலாற்றில் சங்க இலக்கியம்” என்று மாநிலக் கல்லூரி பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
தகவலாற்றுப்படையின் பணி
தமிழ் இணையக் கல்விகத் கழகத்தின் தகவலாற்றுப்படை திட்டம், கடந்த ஓராண்டாய் மாதந்தோறும் கலை, இலக்கியம், பண்பாடு, பண்டைய தமிழக வரலாறு போன்றவற்றை சொற்பொழிவுகளாக நடத்தி இணையத்தில் ஏற்றி வருகிறது. அனுபவமிக்க மனிதர்களைக் கொண்டு இணையத்தில் பதிவு செய்கிறது.
முடிவுரை
இணையத் தமிழ் வளர்ச்சியின் ஒரு பகுதியாக உள்ள இணைய கல்விக்கழகத்தால் தகவலாற்றுப்படை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்மொழியை இணையத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இது ஒவ்வொரு மாதமும் புதிய தலைப்புகளில் புதுமையானத் தகவல்களை உலகத் தமிழர்களுக்குத் தருகின்றது. தகவலாற்றுப்படை தி்ட்டம், வருங்காலங்களில் இன்னும் செம்மையாக தம் பணியைச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
சான்றெண் விளக்கம்
www.tamilvu.org, நாள்: 27.09.2015
மு. பொன்னவைக்கோ, இணையத்தமிழ் வரலாறு, ப.45
நன்றி, tamilvirtualacademy.blogspot.in, நாள்: 27.09.2015